தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது:
குமரிக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
வலுவடையும் காற்றழுத்தம்: தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்ப பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில், இது அந்தமான் கடல் பகுதியில் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறவுள்ளது. மேலும் இது வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.