கடலூரில் மீனவரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மீன்வளத் துறை ஆய்வாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவர் முகமது ஆசிப். மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவர் தனது படகுக்கு பதிவுச் சான்று புதுப்பித்தல், டீசல் மானியம் கோரி, கடலூர் மீன்வளத் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால், இந்த விண்ணப்பத்தை பரிசீலிக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் தர வேண்டுமென மீன்வளத் துறை ஆய்வாளர் மனுநீதிசோழன் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நடைபெற்ற பேரத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தர முடிவு செய்யப்பட்டதாம். எனினும், இதுகுறித்து முகமது ஆசிப் கடலூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை முகமது ஆசிப்பிடம் வழங்கி அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கடலூர் துறைமுகம் பகுதியில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை முகமது ஆசிப் வந்தார். அங்கிருந்த ஆய்வாளர் மனுநீதி சோழனிடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை லஞ்சமாக கொடுத்தார். அங்கு மறைந்திருந்த போலீஸார் மனுநீதிசோழனைக் கைது செய்தனர்.