கடலூா்: கஜா புயலை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறினார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 15 ஆம் தேதியன்று வடதமிழகம்-தென் ஆந்திரா பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் இன்று மாலை அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடலூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக 13 ஊராட்சி ஒன்றியங்கள், 5 நகராட்சிகளில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். புயல் தாக்குதல் இருந்தால் 40 புயல் பாதுகாப்பு மையம், பள்ளிகள், தனியார் மண்டபங்களிலும் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவார்கள். மாவட்டத்தில் புயல் தாக்கினால் பாதிப்புகளை சரிசெய்யும் வகையில் 167 ஜேசிபி வாகனங்கள், 155 டீசல் ஜெனரேட்டா், 152 மரம் அறுக்கும் கருவி, 50 ஆயிரம் மணல் மூட்டை, இருளில் ஒளிரும் 160 விளக்குகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், உணவுக்கான அரிசி, பருப்பு, குடிநீா், சமையல் பொருட்கள், பாத்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்துத்துறை அலுவலர்களையும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.