தருமபுரியில் பிளஸ் 2 மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சதீஷ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தீபாவளிப் பண்டிகைக்காக விடுதியில் தங்கியிருந்த பழங்குடியின பிளஸ் 2 மாணவி 4 நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்திருக்கிறார். இயற்கை உபாதை கழிப்பதற்காக அவர் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார்.
அப்போது, அவரைப் பின் தொடர்ந்து வந்த சதீஷ் மற்றும் ரமேஷ், மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றனர். இதில் படுகாயமடைந்த மாணவி தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மாணவி நேற்று (சனிக்கிழமை) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் புகார் அளித்தும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் நேற்று இரவு முதல் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், தருமபுரி ஆட்சியர் மலர்விழி மாணவியின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, கட்டாயமாக 48 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் வாக்குறுதி அளித்தார். மேலும், புகார் எழுப்பப்பட்ட காவலர்கள் மீது வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொள்வார் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து, மாணவியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில், குற்றவாளிகளாக கருதப்படும் இருவரில் சதீஷ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ரமேஷ் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.