இலவசத் திட்டங்களை அரசியலுக்காக விமர்சிக்கின்றனர் என்றார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை தெரிவித்தது: மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், மாத உதவித் தொகை ரூ. 1,500, கருப்புக் கண்ணாடி, ஊன்றுகோல், வேலைவாய்ப்பில் 3 சதவீதம் என என்ன தேவையோ அதைக் கொடுக்கிறோம். மற்றவர்களுக்கு இணையாக மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவைப்படுவதை எல்லாம் வழங்குகிறோம். அவர்களும் மற்றவர்களைப் போல சமமாக வாழ வழி ஏற்படுத்துகிறோம். இலவசத் திட்டம் என்பது வறுமையில் இருப்போர் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே கொடுக்கப்படுகிறது. நாம் முதல் முதலில் தேர்தலைச் சந்தித்து ஆட்சிக்கு வந்த காலம் முதல் இலவசத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து திட்டங்கள் வருவதை யாரும் குறை சொல்ல முடியாது. அரசியலுக்காக இதை விமர்சிக்கின்றனர் என்றார் வைத்திலிங்கம்.