கடலூர் மத்திய சிறையில், சிறைத் துறை டிஐஜி ஜெயபாரதி தலைமையில் சனிக்கிழமை சோதனை நடைபெற்றது.
கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறைச் சாலையில் தண்டனை, விசாரணைக் கைதிகள் சுமார் 800 பேர் உள்ளனர். இவர்களில், ஐ.எஸ். அமைப்பு ஆதரவாளரான அன்சார் மீரானும் அடங்குவார்.
சிறைச் சாலையை தகர்த்து இவரை மீட்டுச் செல்வோம் என்று பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து மிரட்டலும் விடுக்கப்பட்டது. மேலும், கடலூர் சிறையில் கைதிகள் தற்கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. கடலூர் மத்திய சிறையில் கடந்த மாதம் போலீஸார் திடீர் சோதனை நடத்தி சிம்கார்டு, செல்லிடப்பேசி சார்ஜர், பிளேடு, பீடி உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை காலை சிறைத் துறை டிஐஜி ஜெயபாரதி தலைமையில், கடலூர் சரக காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் த.அ.ஜொ.லாமேக், 3 ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை போலீஸார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கடலூர் சிறையில் சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு கண்டறியும் இயந்திரம், மோப்பநாய் உதவியுடன் நடைபெற்ற இந்தச் சோதனை சுமார் 2 மணி நேரம் நீடித்தது.
எனினும், சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் குறித்த விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
சிறையில் தீப்பெட்டி, பிளேடு, ஆணி போன்ற பொருள்கள் மட்டுமே சிக்கியதாகவும், இது வழக்கமான சோதனைதான் எனவும் சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபோன்ற சோதனை மாதந்தோறும் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.