திருவண்ணாமலையில் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் தீபத் திருவிழாவுக்காக 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையில் 400 இடங்களில் 100 வாட்ஸ் திறன் கொண்ட எல்இடி விளக்குகளும், 70 இடங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கூறினார்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நடைபெற்று வரும் நடைபாதை பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. தீபத் திருவிழாவுக்குள் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
தீபத் திருவிழாவின்போது, கிரிவலம் வரும் பக்தர்களின் நலன் கருதி 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையில் 400 இடங்களில் 100 வாட்ஸ் திறன் கொண்ட எல்இடி விளக்குகள் பொருத்தப்படும். இதில், நெடுஞ்சாலைத் துறை மூலம் செங்கம் பிரிவு சாலையில் இருந்து அபயமண்டபம் வரை 211 இடங்களில் ரூ.2.35 கோடியில் மின்கம்பங்களுடன் கூடிய எல்இடி விளக்குகள் பொருத்தப்படும்.
நகராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் 189 இடங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் புதிய எல்இடி விளக்குகள் பொருத்தப்படும். கிரிவலப் பாதையில் மட்டும் 70 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கூட்ட நெரிசல், குற்ற சம்பவங்கள் கண்காணிக்கப்படும். கிரிவலப் பாதையின் 4 இடங்களில் கண்காணிப்பு அறைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி விடியோ பதிவுகள் கண்காணிக்கப்படும். பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிக்கும் மையங்கள் கிரிவலப் பாதையின் பல இடங்களில் அமைக்கப்படும் என்றார்.