மதுரை விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக தகவல் தெரிவித்த சிறுவனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இருவர் பேசியதைக் கேட்டதாக, மர்ம நபர் ஒருவர் சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தார்.
அதையடுத்து, மதுரை விமான நிலையத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், விமான நிலையத்தை சுற்றிலும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப்படாத நிலையில், தகவல் யார் அளித்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்தனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரித்ததில், மேல அனுப்பாடியைச் சேர்ந்த பிரகதீஸ் (14) என்ற சிறுவன் தான் பேசியுள்ளார் எனத் தெரியவந்தது. மேலும், சிறுவன் மனநிலை சரியில்லாதது போல் தெரிகிறது. எனினும், மருத்துவர்களின் ஆலோசனை பெற்று பின்னர் விசாரணை நடத்தப்படும் என, போலீஸார் தெரிவித்தனர்.