அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது 2 நாளில் புயலாக வலுவடையவுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் சனிக்கிழமை கூறியது: தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலையக தீபகற்ப பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி கடந்த 8-ஆம் தேதி உருவாகியது. இது தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை நிலவியது. இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி சனிக்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது.
அடுத்த 24 மணி நேரத்தில், இது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. மேலும், இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, 2 நாளில் புயலாக வலுவடையும். தொடர்ந்து, இது மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 14-ஆம் தேதி இரவு வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக, வட கடலோரத் தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் அநேக இடங்களில் நவம்பர் 14-ஆம் தேதி மாலையிலிருந்து மிதமான மழையும், ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என்றார்அவர்.
ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்: புயல் எச்சரிக்கையையடுத்து, ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், கடலூர், புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் சனிக்கிழமை ஏற்றப்பட்டுள்ளன.