ஆட்சியில் இருப்பது பழனிசாமியா அல்லது ஸ்டாலினா? - பழனிசாமிக்கு துரைமுருகன் கேள்வி

பாலாறு விவகாரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எத்தனை முறை கடிதம் எழுதினீர்கள்? எனறு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு
ஆட்சியில் இருப்பது பழனிசாமியா அல்லது ஸ்டாலினா? - பழனிசாமிக்கு துரைமுருகன் கேள்வி


சென்னை: பாலாறு விவகாரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எத்தனை முறை கடிதம் எழுதினீர்கள்? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பொருளாளரும் முன்னாள் பொதுத்துறை அமைச்சருமான துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பாலாறு விவகாரம் குறித்து பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் ஏன் பேசவில்லை” என்று பல பிரச்னைகளைப் போல பாலாறு வரலாறும் தெரியாமல் கேள்வி எழுப்பியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதை உறுதியாக எதிர்த்ததும், அதற்கான வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் ஆக்கபூர்வமாக நடத்தி, சாட்சிகள் விசாரணை வரைக்கும் கொண்டு வந்ததும் தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த திமுக அரசுதான் என்பது ஏனோ முதல்வருக்குத் தெரியவில்லை.

அதிமுக ஆட்சியில்தான் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டன. பணிகள் நடைபெற்ற நேரத்தில் கூட அதைத் தடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 19.7.2016 அன்றே வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டம் நடக்கப் போகிறது என்று தெரிந்து கொண்ட அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் “தடுப்பணை கட்ட தடையாணை” கேட்டு வழக்குத் தொடர்ந்தது.

தன் மீதுள்ள ஊழல் வழக்கில் பதைபதைப்புடன் ஓடோடிச் சென்று உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்ற பழனிசாமி, அதே அக்கறையுடனும், வேகத்துடனும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஏன் தடை உத்தரவு பெறவில்லை?. இதைத்தான் நேரத்திற்கேற்ப நிறம்மாறும் செயல் என்று கூற வேண்டும்.

முதல்வரான பிறகு ஆந்திர முதல்வருக்கு எத்தனை கடிதம் எழுதினார்?. பொதுப்பணித் துறை அமைச்சராக இருக்கும் இவர் அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சரிடமாவது பேசினாரா? பிரதமர் நரேந்திரமோடியை பலமுறை சந்தித்துள்ள முதல்வர் பாலாற்று விவகாரம் குறித்து எத்தனை முறை பேசினார்?. எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்தும், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரான என்னைப் பார்த்தும் முதல்வர் பழனிசாமி இந்த கேள்வியை எழுப்புவது ஆட்சியில் இருப்பது அவரா அல்லது நாங்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.

திமுகவை பொறுத்தவரை, கொள்கை அளவில் கூட்டணி அமைப்பதில் வெளிப்படைத்தன்மை நிறைந்த கட்சி என்பது திடீர் கட்சி இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வருக்கு தெரியாது. குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக இடம் பெற்றதே தவிர, பழனிசாமி தலைமை வகிக்கும் அதிமுக பிரிவு போல் பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் கைகட்டி வாய்பொத்தி நின்று அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு, மாநில உரிமைகளை மனச்சாட்சியின்றி அடகு வைத்து விட்டு திரைமறைவில் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கவில்லை.

தமிழக நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துள்ளோம் என்று கூறும் பழனிசாமி, “அதிமுக முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் அளித்த கோரிக்கை மனுக்களில் உள்ள எத்தனை கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்று வெள்ளையறிக்கை வெளியிடத் தயாரா?. ஊழலில் இருந்து தப்பிக்க மத்திய அரசுடன் சொந்த நலனுக்கான உறவே தவிர, தமிழக நலனுக்காக துளியும் இல்லை.

ஆகவே சந்தர்ப்பவாதத்துக்கு சரியான அடையாளம் பிளவுபட்ட அதிமுகவின் ஒரு பிரிவின் இணை ஒருங்கிணைபாளராக இருக்கும் முதல்வர்தானே தவிர, துணிச்சலுடனும், கொள்கை உறுதியுடனும் பாஜகவையும், ஊழல் அதிமுகவையும் தீரமுடன் நிமிர்ந்து நின்று எதிர்க்கும் திமுக. தலைவரோ, திமுகவோ அல்ல என்பதை பழனிசாமி இப்போதாவது புரிந்துகொள்வது நல்லது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com