சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அஇஅதிமுக தலைமையகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புதிய சிலை புதன்கிழமை திறக்கப்படவுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் புதன்கிழமை காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கின்றனர்.
முன்னதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 7 அடி உயரமுள்ள அவரது வெண்கலச் சிலை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு அருகில் திறக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11.10 மணியளவில் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்று சிலையை திறந்து வைத்தனர்.
இருப்பினும் பல்வேறு தரப்புகளில் இருந்து இந்த சிலை தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அது உடனடியாக அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.