புது தில்லி: கஜா புயல் நவம்பர் 15ம் தேதி முற்பகலில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை இந்திய வானிலை ஆய்வு மையம் மாற்றியுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்தியில், வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயலானது வேகம் குறைந்து மிகக் குறைந்த வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
வங்கக் கடலில் சென்னையில் இருந்து 740 கி.மீ. தூரத்திலும், நாகப்பட்டினத்தில் இருந்து 830 கி.மீ. தூரத்திலும் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுவடைந்தாலும் தமிழகத்தை நெருங்கும் முன்பு வலு குறைந்த நிலையில் புயலாக மட்டுமே கரையை கடக்கும்.
கஜா புயல் மணிக்கு 7 கி.மீ., 6 கி.மீ., 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், தற்போது அதன் நகர்வு வேகம் 4 கி.மீ. ஆகக் குறைந்து உள்ளது. வேகம் குறைந்ததால் முன்கணிக்கப்பட்டதை விட தாமதமாக கஜா புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, 15ம் தேதி முற்பகலுக்கு பதிலாக பிற்பகலில்தான் கஜா புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.