குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குட்கா ஊழல் தொடர்பாக ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி அரசு அதிகாரிகளான செந்தில் முருகன், நவநீத கிருஷ்ண பாண்டியன் ஆகியோர் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து இருவர் சார்பிலும் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றமும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனிடையே, தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன் ஆகியோர் ஜாமீன் வழங்க கோரி சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி திருநீலபிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து அவர்களை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 6 பேரின் நீதிமன்ற காவலை நவம்பர் 28ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.