கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்தவர் செல்வன் (54). இவர் கோவை, நீலிக்கோணாம்பாளையத்தில் வசித்து வந்தார். கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட செல்வனுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
அதேபோல் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியனும் (56). கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு செல்வனும் சுப்பிரமணியனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் திருப்பூர் மாவட்டம், கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (44). இவரும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் காய்ச்சல் குணமடையாததால் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சையில் இருந்த ஜெகநாதன் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.