காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தும் விவசாயிகளுக்குப் பயன் எதுவும் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் நடப்பாண்டில் 1,564 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று ஆட்சியாளர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், அதில் நான்கில் ஒரு பங்கு கொள்முதல் நிலையங்கள் கூட இன்னும் திறக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களிலும் முறையாக நெல் கொள்முதல் நடக்கவில்லை. ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் தினமும் 200 குவிண்டால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யும் பணியாளர்கள், அதற்கு மேல் உழவர்களிடமிருந்து நெல் வாங்க மறுக்கின்றனர்.
இதற்கு கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கூறும் காரணம் நெல் ஈரப்பதமாக இருக்கிறது என்பதுதான். இது ஏற்றுக் கொள்ளவே முடியாத வாதமாகும். பொதுவாக 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் நிலையங்களில் எடுத்துக் கொள்ளப்படும். வெயில் காலங்களில் அறுவடை செய்யப்படும் சம்பா பருவ நெல்லுக்குத்தான் இந்த ஈரப்பத அளவு பொருந்துமே தவிர, மழைக்காலங்களில் அறுவடை செய்யப்படும் குறுவை நெல்லுக்கு பொருந்தாது. எனவே, ஈரப்பதத்தின் அளவு சற்று அதிகமாக இருந்தாலும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.