அதிமுக தலைமை அலுவலகத்தில், புதிதாக வடிவமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை புதன்கிழமை (நவ. 14) திறக்கப்பட உள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் புதிய சிலையைத் திறந்து வைக்க உள்ளனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. இந்தச் சிலையின் வடிவமைப்பில் பெரும் சர்ச்சை எழுந்தது. சிலை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை போன்று இல்லை என்று பரவலாக விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில், சிலையை மாற்ற அதிமுக தலைமை முடிவு செய்தது. சிலையை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிற்பி ராஜ்குமார் வடிவமைத்தார்.
இதைத் தொடர்ந்து, புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலையானது அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 23-ஆம் தேதி நிறுவப்பட்டது.
இந்தச் சிலையை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் புதன்கிழமை (நவ. 14) திறந்து வைக்க உள்ளனர். இதற்கான நிகழ்வு அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.