வயது நிர்ணயம் தொடர்பான புதிய அறிவிப்பின்படி சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை நடத்த தடை கோரும் மனுவுக்கு திருப்பூரில் உள்ள அப்பள்ளியின் முதல்வர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த ஆர்.அனிதா தாக்கல் செய்த மனு:
பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சைனிக் பள்ளி தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அமராவதிநகரில் உள்ளது.
இப்பள்ளியில் 6 முதல் 9 வகுப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் பங்கெடுக்க ஜூலை 31 ஆம் தேதிப்படி 10 முதல் 12 மற்றும் 13 முதல்15 வயதுடையவர்களாக இருக்க வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால் கடந்த செப்டம்பரில் வெளியான அறிவிப்பில் மார்ச் 31 ஆம் தேதிப்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் பிறந்த மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்க இயலாத நிலை உருவாகும்.
இதனால் இந்த தேர்வுக்காக தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது, மனுவை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து திருப்பூரில் உள்ள சைனிக் பள்ளியின் முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.