டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ். படத்துக்கு தடை கோரி வழக்கு
பிக்பாஸ் ஜூலி நடித்து வரும் டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ். திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அந்த திரைப்படத்தின் இயக்குநர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அனிதாவின் தந்தை சண்முகம் தாக்கல் செய்த மனு: நீட் தேர்வை எதிர்த்து எனது மகள் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனது மகளின் தியாகத்தையும், நடைபெற்ற போராட்டங்களையும் வைத்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குநரிடம் அனிதா தொடர்பான எந்த வாழ்க்கை குறிப்பும் இல்லை. அனிதா இருந்த அரியலூர் மாவட்டம் குமுழூர் கிராமத்துக்கு இயக்குநர் வந்ததே இல்லை. எனவே, இந்த திரைப்படத்துக்கு தடை விதிப்பதுடன், எனது மகளின் பெயரைப் பயன்படுத்தியதற்காக ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
நவம்பர் 22-க்கு ஒத்திவைப்பு: இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ். திரைப்படத்தின் இயக்குநர் அஜய்குமார் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் நவம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.