தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளதாக சட்டப்பேரவை அலுவலகம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் டிடிவி தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், அந்த 18 சட்டப்பேரவை தொகுதிகளும் ஒரு வருடத்துக்கும் மேலாக காலியாகவே உள்ளது.
இதையடுத்து, 18 சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் எடுத்த முடிவில் தவறில்லை என்று உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 25-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், 18 சட்டப்பேரவை தொகுதிகளும் காலியாக உள்ளதாக சட்டப்பேரவை அலுவலகம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கடிதத்துடன் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலையும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.
இதன்மூலம், அடுத்த 6 மாதங்களில் இந்த 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. மக்களவை தேர்தலுடன் இணைத்து இந்த 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.