கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் தரங்கம்பாடிக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கஜா புயலால் தஞ்சை ,நாகை, திருவாரூர், மற்றும் கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக கஜா புயலின் கோரத் தாண்டவம், நாகை மாவட்ட மக்களின் பல ஆண்டு கால உழைப்பில் உருவான பல கோடி ரூபாய் மதிப்பிலான உடமைகளை நிர்மூலமாக்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரையிலான கணக்கெடுப்புப்படி, மாவட்டத்தில் 11,512 வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும், 2,900 மீன்பிடி ஃபைபர் படகுகள் பகுதியளவிலும், 350 படகுகள் முழுமையாகவும், 125 விசைப் படகுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 11 கால்நடைகள் இறந்துள்ளன.
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் தரங்கம்பாடிக்கு இன்று சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோரும் வந்தனர்.
தொடர்ந்து நாகை அக்கரைபேட்டை மீனவர்களிடம் குறை கேட்ட ஸ்டாலின் அங்கிருந்து வேதாரண்யம் புறப்பட்டுச் சென்றார்.