இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் முகாந்திரம் உள்ளது என்று தில்லி நீதிமன்றம் தீர்ப்பளிக்க, சதியின் காரணமாக தொடரப்பட்ட வழக்கை பொய் வழக்கு என்று நிரூபிப்பதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி அருண் பரத்வாஜ், இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கிறது என்றும், சதி திட்டம் தீட்டுதல், மோசடி, அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி, சாட்சியங்களைக் கலைத்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கும் முகாந்திரம் உள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தரகர் சுகேஷ் சந்திரசேகரன், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, குமார் உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கும் முகாந்திரம் உள்ளது என்று கூறியுள்ள நீதிபதி, இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நந்துசிங், லலித் குமார் உட்பட 5 பேரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் டிசம்பர் 4-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு டிடிவி தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக கருத்து பதவிட்டுள்ளார். அதில்,
"சிலரது சதியின் காரணமாக, இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லி நான் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, இது பொய் வழக்குதான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன்" என்றார்.