சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை வடஇந்திய சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரிக்கு நாள்தோறும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் இரண்டையும் இங்கு தெளிவாகப் பார்க்கலாம் என்பதால் ஆண்டுதோறும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக வடஇந்திய சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. முக்கடல் சங்கமம், பகவதியம்மன் கோயில் கிழக்கு வாசல், பேரூராட்சிப் பூங்கா, காந்தி, காமராஜ் மண்டபங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுகளில் செல்ல நீண்ட வரிசை காணப்பட்டது. மாலையில் சூரிய அஸ்தமனம் பார்ப்பதற்காக சன்செட் பூங்காவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.