டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. அது மேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர பகுதியில் நிலைகொள்ளும். அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற ஓரளவு வாய்ப்புள்ளது.
24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். அடுத்ததாக படிப்படியாக உள்மாவட்டங்களில் மழை பெய்யும். கனமழையை பொறுத்தவரை கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்யும்.
மீனவர்கள் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழக தென்மேற்கு கடல் பகுதிக்கு செல்லவேண்டாம்.
சென்னையை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்" என்றார்.