புயல் பாதித்த 3 மாவட்டங்களில் 21, 22-ஆம் தேதிகளில் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு
சென்னை: கஜா புயல் பாதித்த 3 மாவட்டங்களில் வரும் 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தைத் தாக்கியா கஜா புயலானது டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கடுமையான சேதத்தினை உண்டாகியுள்ளது. உயிர் சேதங்களை விடவும் கடுமையான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தென்னை மற்றும் வாழை மரங்கள் முற்றிலும் அழிந்து விட்டன அதற்கான நிவாரணப் பணிகளும் பல்வேறு கட்டங்களில் தொடர்ந்து நடந்து வருகின்றன.
சற்று முன்னர் கஜா புயல் நிவாரண பணிகளுக்காக உடனடியாக ரூ.1000 கோடி விடுவித்து, முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் கஜா புயல் பாதித்த 3 மாவட்டங்களில் வரும் 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கஜா புயல் பாதித்த 3 மாவட்டங்களில் வரும் 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்ய உள்ளார்.
இதற்காக வரும் 20-ஆம் தேதி இரவு அவர் சென்னையில் இருந்து புறப்படுகிறார்.
21-ஆம் தேதி முழுவதும் நாகப்பட்டிணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
21-ஆம் தேதி இரவு அவர் திருவாரூர் சென்று அங்கு தங்குகிறார்.
பின்னர் 22-ஆம் தேதி அவர் திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்கிறார்.
ஆளுநர் வருகையின் போது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அவருக்கு மலர்க்கொத்து, புத்தகங்கள் மற்றும் பொன்னாடை வழங்குவதை தவிர்க்கவும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.