தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத் துறையினர் செவ்வாய்க்கிழமை தடை விதித்தனர். இதனால், 100-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 நாள்களாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினர் தடை விதித்தனர். கஜா புயல் தாக்கியதில் ராமநாதபுரம் மாவட்டத்தை தவிர்த்து பல மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தது.
ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 நாள்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாதது மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்கச் செல்லும் நிலையில் பாம்பன் மீனவர்கள் ஆயத்தமாகி, மீன்வளத் துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதி டோக்கன் வாங்கச் சென்றனர். அப்போது, வானிலை மையத்தின் எச்சரிக்கை குறித்த தகவலை மீனவர்களுக்கு தெரிவித்து, மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்தனர்.
இதனால் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல், ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்களும் புதன்கிழமை முதல் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறையினர் தடை விதித்துள்ளனர்.