திருச்சி: திருச்சி அருகே மரணமடைந்த தாயின் உடல்மேல் அமர்ந்து அஹோரி சாமியார் ஒருவர் வினோத இறுதிச் சடங்கு நடத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சிவனின் அதிதீவிர உக்கிர பக்தர்ககளாக கருதப்படுபவர்கள் அகோரி சாமியார்கள். இவர்கள் இந்தியாவில் பெரும்பாலும் காசி, இமயமலைப் பகுதிகளான கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் நேபாளம் ஆகிய இடங்களில் அதிகமாக வசித்து வருகிறார்கள். ஆண்டுதோறும் வடமாநிலங்களில் நடைபெறும் கும்பமேளாவில் பெருந்திரளாக இவர்கள் கலந்து கொள்வதைப் பார்த்திருக்கலாம். தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தங்களது இஷ்ட தெய்வங்களுக்கு கோவில்களை கட்டி பூஜை நடத்தி வருகிறார்கள்.
அந்த வரிசையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை காசியில் முறையாக அகோரி பயிற்சி பெற்ற திருச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நிர்வகித்து வருகிறார்.
இங்கு சனிக்கிழமைதோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் அமாவாசை, பவுர்ணமி பூஜை, வளர்பிறை அஷ்டமி பூஜை, தேய் பிறை அஷ்டமி பூஜை ஆகியவையும் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கோவில் நிர்வாகியான அகோரி சாமியார் மணிகண்டனின் தாயார் மேரி மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் அடக்க சடங்கு அரியமங்கலம் மத நல்லிணக்க இடுகாட்டில் செவ்வாயன்று நடைபெற்றது. இடுகாட்டிற்கு சென்றதும் வழமையான இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் முதலில் நடைபெற்றது.
பின்னர் அகோரி மணிகண்டன் தனது தாயின் உடல் மீது அமர்ந்து, மந்திரங்கள் ஓத விசேஷ பூஜைகள் செய்தார். அவருடன் சக அகோரிகளும் மேளத்தினை முழங்கி, சங்கு ஊதி பங்கு பெற்றனர்.
இவ்வாறு இறந்தவரின் உடல் மீது அமர்ந்து அஞ்சலி பூஜை செய்வது அகோரிகளின் வழக்கம் என்றும், அவ்வாறு செய்தால் இறந்தவராது ஆன்மா சாந்தியடையும் என்று அகோரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவமானது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.