குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமியின் கருவைக் கலைக்க அனுமதி கோரிய வழக்கில், அந்தச் சிறுமியின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், பெரியவடகிரி கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வேலு என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது தாயார் மல்லிகா பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கருவுற்றிருப்பதையடுத்து, குழந்தை திருமணம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், குழந்தை திருமண தடைச் சட்டத்தின்கீழ் சிறுமியின் கணவர் வேலுவை கைது செய்தனர். இந்த நிலையில், சிறுமியின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் கருவைக் கலைக்க அனுமதி கோரி சிறுமியின் தாய் மல்லிகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியின் உடல்நிலை குறித்துப் பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.