சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 1 முதல் ஸ்ட்ரைக்கில் ஈடுபடப் போவதாக அரசு பஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் கடந்த ஜனவரி மாதத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையிட்டீல், ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது.
அப்போதைய பேச்சு வார்த்தையின் போது அரசின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டுமே அரசு நிறைவேற்றியது.
இந்நிலையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 1 முதல் ஸ்ட்ரைக்கில் ஈடுபடப் போவதாக அரசு பஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 7 ஆயிரம் கோடியை திரும்ப வழங்க வேண்டும், 2003-க்கு பின் பணியில் சேர்ந்த பணியாளர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் மற்றும் ஊதிய உயர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 1-ம் தேதி ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வியாழன் அன்று மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளன இதுதொடர்பான நோட்டீஸ் விரைவில் போக்குவரத்து மேலாண் இயக்குநர் மற்றும் தொழிலாளர் துறை ஆணையரிடம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது என்பதால் அதற்குள் இப்பிரச்னை குறித்து சுமூக தீர்வு எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.