சென்னை: தமிழகத்தில் வரும் 7ம் தேதி அதீத கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதால், அன்றைய தினம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்துள்ளது.
கன மழை காரணமாக ஏற்படும் பேரிடர்களைச் சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகத்துக்கு அக்டோபர் 7ம் தேதி ரெட் அலர்ட் அளித்திருப்பதாக பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குனர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 7ம் தேதி 25 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது குறைந்த நேரத்தில் அதிகளவில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் காலங்களைக் கையாள தமிழகத்தில் சுமார் 1,275 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையெனில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.