தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ய்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை விட்டு விட்டு மழை பெய்யலாம்.
தென்கிழக்கு அரபிக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி புயலாக மாறும். இந்த புயலானது ஓமன் கடற்கரை நோக்கி நகரக்கூடும். எனவே, குமரிக்கடல், கேரள கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும்.
அக்.7ஆம் தேதிக்குப்பின் தென்தமிழகம், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் அதிகபட்சமாக 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.