தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து லட்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் அனைவரும் துறைமுகத்துக்கு திரும்ப வேண்டும் என இந்திய கடலோர காவல்படையினர் கப்பல்கள், விமானங்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும், கனமழை எச்சரிக்கை காரணமாக 7-ஆம் முதல் 9-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நீலகிரி மலை ரயில் (குன்னூர் - மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் - ஊட்டி) ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் 3-ஆவது நாளாக பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது. மழை காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 2-ஆம் நாளாக வனத்துறை தடை விதித்தது.
திருவாரூர் மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து 8300087700 என்ற எண்ணில் மக்கள் புகார் அளிக்கலாம் என மாவட்ட எஸ்.பி விக்ரமன் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் ஜெயகுமார், நொய்யல் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா படகுகள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.