பசுமைவழிச் சாலைத் திட்ட வழக்கு: அரசு வழக்குரைஞர்களுக்கு நீதிமன்றம் கேள்வி

சென்னை -சேலம் பசுமை வழிச் சாலைத் திட்ட வழக்கின் விசாரணைக்கு ஆஜராக அரசு தரப்பு வழக்குரைஞர்களுக்கு அழைப்பிதழ் வைத்து கூப்பிட வேண்டுமா


சென்னை -சேலம் பசுமை வழிச் சாலைத் திட்ட வழக்கின் விசாரணைக்கு ஆஜராக அரசு தரப்பு வழக்குரைஞர்களுக்கு அழைப்பிதழ் வைத்து கூப்பிட வேண்டுமா என, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை -சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராக பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தொடர்ந்துள்ள வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகின்றன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தருமபுரியில் சட்ட விரோதமான முறையில் மரங்களை வெட்டியது தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரியது தொடர்பாக அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அந்த குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகள் பற்றியும் கேள்வி எழுப்பினர். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இதுகுறித்து பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்காக பல அதிகாரிகள் இங்கு வந்து காத்திருக்கின்றனர். அரசு வழக்குரைஞர்களால் அவர்களிடம் தகவல்களைப் பெற்று தெரிவிக்க முடியவில்லையா? 8 வழிச்சாலை திட்ட விசாரணைக்காக அரசு தரப்பு வழக்குரைஞர்களுக்கு அழைப்பிதழ் வைத்து அழைக்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், சட்டவிரோதமாக விதிகளை மீறி பேனர்கள் வைக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இந்த நிலையில் கடந்த வாரம் சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த பேனர்களில், உயர்நீதிமன்றத்தின் அரசு சிறப்பு வழக்குரைஞரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அரசு வழக்குரைஞர் மீறுவதை ஏற்க முடியாது. அரசுத் தரப்பு வழக்குரைஞர் பதவிக்கு தனி சிறப்பும், மரியாதையும், கண்ணியமும் உள்ளது என கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், இவ்வழக்கின் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (அக்.9) ஒத்திவைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com