விழுப்புரம்: விழுப்புரம் அருகே காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு ஆயுதப்படைக் காவலர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்வேல் இவர் சென்னை ஆவடியில் ஆயுதப்படைக் காவலராக பணியாற்றி வந்தார். விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரைச் சேர்ந்தவர் சரஸ்வதி. சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் எம்.பி.பி.எஸ் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இவர்கள் இருவரும் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இருவரிடையே ஏதோ வருத்தம் நிலவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சரஸ்வதிக்கு இன்று பிறந்த நாள். எனவே அவரை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்வதாகவும், இருவருக்குமிடையில் நிலவும் கருத்து வேறுபாடுகளை களையவும் கார்த்திக்வேல் நேரில் சென்றுள்ளார்.
ஆனால் அப்போது அவர்களுக்கு இடையில் மீண்டும் சண்டை மூண்டுள்ளது. இதன் காரணமாக கார்த்திக்குவேல் அவரைச் சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவத்தால் அன்னியூரில் பரபரப்பு நிலவுகிறது.