சசிகலா அதிமுகவில் உறுப்பினர் கிடையாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக உறுப்பினர் அட்டை வழக்கு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம்,
சோதனைகளை தாங்கி அதிமுகவை காப்பாற்றியவர் ஜெயலலிதா. தொண்டர்களால் அதிமுக வழிநடத்தப்படுகிறது. சசிகலா அதிமுகவில் உறுப்பினர் கிடையாது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபுவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மூவரிடமும் விளக்கம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தினகரன் தனி கட்சி தொடங்கிவிட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர், பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர். 1.5 கோடி உறுப்பினர்களை கொண்ட அதிமுக என்னும் எஃகுக்கோட்டையை உருவாக்கியவர் ஜெயலலிதா. அதிமுகவில் நடப்பாண்டில் 60 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். அதிமுக வழிகாட்டுதல் குழு தேவைப்படும் போது அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்