ரயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களை இளைஞர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ரயில்வே துறையில் 2.45 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்களுக்கான பணியிடங்கள் காலியாக இருந்தால், அவற்றை அவ்வப்போது நிரப்ப நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அதைவிடுத்து, ரயில்வேயில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு லட்சம் பேருக்கு மீண்டும் பணிகள் வழங்கி ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 60 வயதைக் கடந்த நிலையில் உள்ளவர்களுக்குப் பணி வழங்கும்போது, அவர்கள் ரயில்வே பாதுகாப்பு உள்பட பல்வேறு பணிகளுக்கு தகுதி வாய்ந்தவர்களாக இருக்கமாட்டார்கள் என ரயில்வே ஊழியர்களே தெரிவிக்கின்றனர். எனவே, காலிப் பணியிடங்களை வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்று வாசன்கூறியுள்ளார்.