லூபன் புயல் காரணமாக, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை வரை (அக்.14) மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது:
வங்கக்கடலில் உருவான டிட்லி அதிதீவிர புயல், வியாழக்கிழமை அதிகாலை ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பலசா என்னும் இடத்தில் கரையை கடந்தது. இந்த புயல் படிப்படியாக வலுவிழக்கும்.
மத்திய மேற்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள அதிதீவிர புயலான லூபன் தொடர்ந்து மேற்கு மற்றும் தென்மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து ஏமன் மற்றும் தெற்கு ஓமன் கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது.
டிட்லி புயல் காரணமாக வடக்கு வங்கக்கடல் பகுதிக்கு வெள்ளிக்கிழமை (அக்.12) வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று லூபன் புயல் காரணமாக மத்திய மேற்கு அரபிக்கடலில் ஆழமான பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை (அக்.14) மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்றார் அவர்.