தமிழகத்துக்கும், தமிழ் மொழிக்கும் புதிய அடையாளத்தை உருவாக்கியவர் ம.பொ.சி. என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு புகழாரம் சூட்டினார்.
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 23 -ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி, ம.பொ.சி.யின் சுயசரிதை "எனது போராட்டம்' நூல் வெளியீட்டு விழா ஆகியவை, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நூலை வெளியிட்டு, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியது:
தமிழகத்துக்கும், தமிழ் மொழி, கலாசாரத்துக்கும் புதிய அடையாளத்தை உருவாக்கியவர் ம.பொ.சி. "தமிழ்நாடு' என்ற மாநிலம் உருவாக பாடுபட்டவர். தமிழகத்தின் எல்லையை நிர்ணயித்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்.
ரா.பி. சேதுப்பிள்ளையால் ம.பொ.சி.க்கு வழங்கப்பட்ட "சிலம்புச் செல்வர்' என்ற பட்டம், இளங்கோவடிகளின் காப்பியமான சிலப்பதிகாரத்தைப் பற்றி அவர் மேற்கொண்ட ஆழமான ஆராய்ச்சிக்காக மட்டுமின்றி, அதனைப் பிரபலப்படுத்த அவர் மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்காகவும் வழங்கப்பட்டது.
கலைக்களஞ்சியம்:
ம.பொ.சி. எழுதிய "விடுதலைப் போரில் தமிழகம்' என்ற நூல் தமிழகத்தில் தேசிய உணர்வை ஊட்டுவதாக அமைந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பை இந்த நூல் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. தற்கால தமிழகத்தில் உள்ள தேசியவாதிகளுக்கு இந்த நூல் ஒரு கலைக்களஞ்சியமாக திகழ்கிறது என்றார் வெங்கய்ய நாயுடு.
இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், க.பாண்டியராஜன், விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், விஜிபி குழுமத்தின் தலைவர் வி.ஜி.சந்தோஷம், ம.பொ.சி.யின் மகள் மாதவி பாஸ்கரன், பேரன் டாக்டர் பா.செந்தில் ம.பொ.சி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.