உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் தமிழகம் சீரழிந்து வருகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்குவதில் அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்கிறோமா என்ற தலைப்பில் பாமக சார்பில் அடையாறில் உள்ள முத்தமிழ்ப் பேரவை மன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் ராமதாஸ் பேசியது: கிராமப்புறங்களில் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மக்கள் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக ஊராட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இதற்காக பல்வேறு சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றை முறையாக யாரும் பின்பற்றுவதில்லை.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உரிய காலத்தில் நடத்தாததால் அனைத்துப் பகுதிகளும் சீரழிந்து கிடக்கின்றன.
உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டும். அதன் மூலம்தான் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும் என்றார்.
காந்தி கிராம பல்கலைக்கழகப் பேராசிரியர் க.பழனித்துரை உள்ளாட்சி மேம்பாடு அடைய வேண்டியதன் அவசியம் மற்றும் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பேசினார். பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட பலர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.