பள்ளி மாணவர்களுக்கு வங்கி, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் மலர் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சியை சனிக்கிழமை பார்வையிட்ட தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகைப் பதிவை பயோமெட்ரிக் முறையில் பதிவுசெய்து பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை, போரூரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் வகுப்பு மூலம் நடைபெறும் பாடங்களை குறுஞ்செய்தி மூலம் பெற்றோருக்கு எடுத்துச் செல்ல அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. "அடல் டிங்கர்லேப்' எனப்படும் அறிவியல் ஆய்வகம் 672 பள்ளிகளில் டிசம்பர் மாத இறுதிக்குள் நிறுவப்படும்.
மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அவர்களுக்கு சேமிப்புப் பழக்கத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை அந்தப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் ஜீரோ பேலன்ஸில் மாணவர்களுக்கு சேமிப்புக் கணக்கைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனவரி 2019-க்குப் பிறகு பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்துள்ளது குறித்து சுற்றுச்சூழல் துறை மூலம் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பள்ளிக் கல்வித் துறையிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.