நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு உள்ளது என்று அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்வி எழுப்பினார்.
தாமிரவருணி மஹா புஷ்கரம் விழாவையொட்டி, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பாபநாசம் தாமிரவருணியில் சனிக்கிழமை புனித நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும், மகிழ்ச்சியை நீட்டிக்கச் செய்வதற்கும் ஆன்மிகம் முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலில் ஈடுபடும் உரிமை உண்டு. வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளி என அனைவரும் அரசியலில் ஈடுபடும்போது நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் மட்டும் சிலருக்கு ஏன் கோபம் வருகிறது?. தமிழ் ரசிகர்களால், மக்களால் வளர்ந்தவர் விஜய். அந்தத் தமிழர்களுக்கு அவர் ஏதாவது செய்ய வேண்டும் என்பது ஒரு தமிழனான எனக்கு விருப்பம். மக்கள் மன்றம் என்ற பெயரில் விஜய் சேவை செய்து வருகிறார். அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு உள்ளது என்றார் அவர்.