அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவிப்பு
அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு 2 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்கிழமை அறிவித்தார்.
விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கியதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி இடஒதுக்கீட்டை 2-ல் இருந்து 3 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் ஜெயலலிதாவின் அரசு கல்வித்துறைபோல் விளையாட்டுத்துறைக்கும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. ஒவ்வொருவரிடமும் உள்ள திறமைகளை ஆராய்ந்து ஊக்கம் அளிப்பது அரசின் கடமை.
சென்னை தவிர்த்து 31 மாவட்டங்களில் தலா ஒரு கிராமத்துக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தப்படுகிறது, உபகரணங்கள் வழங்கப்படுகிறது மற்றும் வீரர்களுக்கு தரமான பயிற்சி அளிக்கப்படுகிறது.
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.
நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவை தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு 2 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.