கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை: ஜாமீனில் வெளியான முன்னாள் பேராயருக்கு பஞ்சாபில் உற்சாக வரவேற்பு

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வெளியான முன்னாள் பேராயர் பிராங்கோ முலக்கலுக்கு பஞ்சாப் மாநிலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை: ஜாமீனில் வெளியான முன்னாள் பேராயருக்கு பஞ்சாபில் உற்சாக வரவேற்பு

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வெளியான முன்னாள் பேராயர் பிராங்கோ முலக்கலுக்கு பஞ்சாப் மாநிலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை பேராயராக இருந்த முலக்கல், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், பல்வேறு தருணங்களில் தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக, கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதையடுத்து போலீஸார் பேராயர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

எனினும் கன்னியாஸ்திரியின் இந்த புகாரை மறுத்து வந்த முலக்கல், தனது பேராயர் பதவியை ராஜிநாமா செய்தார். கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக பலரும் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து பேராயர் கடந்த மாதம் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவர் கோட்டயம் மாவட்டம், பாலாவில் உள்ள சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

இதையடுத்து, கடவுச் சீட்டை ஒப்படைத்து விட்டு கேரளத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும், வழக்கு விசாரணைக்காக இரு வாரத்துக்கு ஒருமுறை மட்டும்தான் கேரளத்துக்கு வர வேண்டும் என்றும் நிபந்தனையின் அடிப்படையில் முலக்கலுக்கு ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. அதனடிப்படையில் அவர் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, அவர் முதலில் திருச்சூரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றார். அதன்பிறகு, அவர் இன்று (புதன்கிழமை) பஞ்சாப் மாநிலம் ஜலந்தருக்கு சென்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக, அவர் கூறுகையில், "பஞ்சாப் மக்களின் பிரார்த்தனை எனக்கு ஆதரவு அளித்தது. வரும் நாட்களிலும் அவர்கள் எனக்காக பிரார்த்தனை செய்வார்கள் என்று நம்புகிறேன். அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விசாரணை நடைபெற்று வருகிறது. நான் அதற்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். நான் சட்டத்தை நிலை நிறுத்தும் குடிமகன். இந்தியாவின் சட்ட ரீதியிலான அமைப்பு மீது எனக்கு நம்பிக்கை உள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com