சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க இன்று மறுத்தால் இன்னும் 5 ஆண்டுகளில் அவர்கள் கோயிலுக்குள் செல்வார்கள் என்று நடிகர் சிவகுமார் சனிக்கிழமையன்று பேட்டியளித்தார்.
இதுதொடர்பாக, சென்னை அண்ணா நகரில் அவர் சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறுகையில்,
"ஆண் பிறப்பதற்கு காரணம் ஒரு பெண். அவள் ஒரு மரியாதைக்குரிய தாய். பெண்களை தவிரித்து ஆண்கள் வாழ முடியாது. அவர்களை அடக்கி வைத்த காலம் போய்விட்டது. இனிமேல் அவர்களை ஒதுக்க முடியாது.
சபரிமலை கோயிலுக்கு மகரஜோதி நாட்களில் மட்டும் பெண்கள் செல்லவேண்டாம். அந்த நாட்களில் ஏற்கனவே ஆண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி செல்கின்றனர். அதனால், அந்த 10 நாட்கள் தவிர்த்து 365 நாட்களுள் மீதமுள்ள நாட்களில் அவர்களை சபரிமலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். பெண்களை மதியுங்கள், அனுமதியுங்கள்.
இன்றைக்கு தவிர்த்தால், இன்னும் 5 ஆண்டுகளில் பெண்கள் கோயிலுக்குள் செல்வார்கள்" என்றார்.
முன்னதாக, சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஒரு நிகழ்வில் நடிகர் சிவகுமார் பங்கேற்றிருந்தார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பைத்தியம் பிடித்தது போல் ஐயப்பன் கோவிலுக்குச் செல்கிறார்கள் என்று பெண்கள் மீது குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக, அவர் நேற்று பேசியது,
"ஏன் கடவுள்களை வீட்டிலேயே வணங்கிக் கொள்ளக் கூடாதா? ஐயப்பனை அவர்கள் வீட்டிலேயே கும்பிடக் கூடாதா? முருகனை வீட்டிலேயே வணங்கினால் ஆகாதா?
கடவுள் நமபிக்கையுள்ள நான் கோவில்களுக்குப் போவதில்லை. ஆனால் வணங்குவதற்காக எல்லா கடவுள்களின் படங்களும் என் வீட்டில் உள்ளது.
பெண்கள் ஏதோ பைத்தியம் பிடித்தது போல் ஐயப்பன் கோவிலுக்குச் செல்கிறார்கள். அப்படி பிடிவாதம் பிடிப்பது ஏன்?
அப்படிப் போக வேண்டும் என்று விரும்பினால், உச்ச நீதிமன்றம் அனுமதியளித்து அரசும் உதவும் பட்சத்தில் ஏதேனும் விடுமுறை நாட்களில் போய் பார்த்து விட்டு வரலாம். அப்படி இல்லாமல் கூட்டத்தோடு போவேன் என்று கூறினால் அதற்கான பின்விளைவுகளை சந்தித்துதான் ஆக வேண்டும்.
மக்கள் மிகவும் கோபமாக இருக்கிறாரகள். அதனை சபரிமலைக்குப் போக விரும்பும் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்"
இவ்வாறு அவர் நேற்று தெரிவித்தார்.