சென்னை: சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். ஆனால் அதே சமயம் ஐதீகம் பின்பற்றப்பட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ரஜினி நடித்து வரும் பேட்ட என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வாராணசியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ரஜினி அளித்த பதிலில், தான் தொடங்கவிருக்கும் கட்சிப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. ஆனால், டிசம்பர் 12ம் தேதி கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று கூறினார்.
மேலும், மீ டூ (#MeToo) என்பதை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் ரஜினி கூறினார்.
சபரிமலை விவகாரம் குறித்த கேள்விக்கு ரஜினி அளித்த பதிலில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். அதே சமயம், காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையை மாற்றக் கூடாது என்று கூறினார்.