முதல்வர் வழக்குப் போட்டால் அதை எதிர்கொள்ள தயார் என திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் அவர் மேலும் பேசியது:
திமுகவைப் பார்த்து எத்தனையோ அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் ஏளனமாகவும், கேலியாகவும் பேசினர்.
அப்படி பேசியவர்களுடைய கதைகள் எல்லாம் என்னாவயிற்று என்பது மக்களுக்குத் தெரியும்.
இப்போது அண்மையில் எடப்பாடி பழனிசாமி ஒரு நிகழ்ச்சியில் திமுகவை விமர்சித்து பேசுகிற நேரத்தில் திமுக ஒரு கம்பெனி எனப் பேசியுள்ளார்.
மேலும், என் மீதுதான் வழக்கு போடுவீர்களா. திமுக மீதும் வழக்குப் போடுவேன் எனப் பேசுகிறார். அவ்வாறு வழக்குப் போட்டாலும், அதை திமுக எதிர்கொள்ளும். திமுக மிசா, தடா என எத்தனையோ வழக்குகளைச் சந்தித்துள்ளது. நாம் விரைவிலேயே தேர்தலைச் சந்திக்க உள்ளோம்.
அது சட்டப்பேரவைத் தேர்தலாக வரப் போகிறதா அல்லது நாடாளுமன்றத் தேர்தலா, அல்லது இரண்டு தேர்தலும் சேர்ந்து வரப்
போகிறதா என்ற ஒரு கேள்விக்குறியோடு காத்துக் கொண்டிருக்கிறோம்.
அதற்கான ஆயத்தப் பணிகளில் நாமெல்லாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார் ஸ்டாலின்.
விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திமுக முதன்மைச் செயலர் டி.ஆர். பாலு, அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.