கீழடியில் அகழாய்வுப் பணி தொடர வேண்டும்
தமிழரின் முழுமையான வரலாற்றை உலக மக்கள் அனைவரும் அறியும் வகையில் கீழடியில் மீதமுள்ள பகுதிகளை அகழாய்வு செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சு.திருநாவுக்கரசு வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை குறித்து கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அவர் பேசியது: வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றும்.
தமிழகத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடரும். தேர்தல் நேரத்தில்தான் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளிடம் பேசப்படும். தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பல்வேறு கட்சியினர் முன் வந்துள்ளனர். இங்கு கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லா விட்டாலும், காங்கிரஸ் கட்சி தன்னுடைய செல்வாக்கை இழக்கவில்லை. விரைவில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்கிற நம்பிக்கை உள்ளது. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் விரைவில் நடத்தப்படும்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் பழங்கால தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஏராளமான தொல் பொருள்கள் கிடைத்துள்ளன. எனவே, தமிழரின் முழுமையான வரலாற்றினை உலக மக்கள் அனைவரும் அறியும் வகையில் கீழடியில் மீதமுள்ள பகுதிகளை அகழாய்வு செய்ய வேண்டும் என்றார்.