சபரிமலை கோயிலின் புனிதம் காக்கப்படவேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது:
தமிழக அரசு மக்களுக்கான அரசு என்பதில் முழுமூச்சாக இருக்கிறோம். ஏழை, எளியோர் இல்லாத மாநிலமாகத் தமிழகம் இருக்க வேண்டும் என பணியாற்றி வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் 8.5 லட்சம் பேருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு மண்டலங்களில் கறவை மாடுகள் திட்டம் தொடங்கப்பட்டு 12, 500 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 77 ஆயிரம் பேருக்குத் தலா 50 நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டத்துக்கு ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக முதல்வர் விரைவில் தொடக்கிவைப்பார்.
நடிகர் கமல்ஹாசன் எது, எங்கு என தெரிந்து பேச வேண்டும். பொதுவாக தமிழகத்தில் ஏதோ நடக்கிறது என பேசி அரசியல் செய்ய நினைக்கிறார்.
மற்ற மாநிலங்களைவிட தமிழகம்தான் அனைத்துத் துறையிலும் சிறந்த முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சபரிமலை கோயிலின் புனிதம் காக்கப்படவேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் இருக்கக்கூடாது என்றார்.