வட கிழக்கு பருவமழை தொடங்குவது மேலும் தாமதமாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:
அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முழுமையாக விலக்கிக்கொள்ள சாதகமான சூழல் உள்ளது. அதன்பிறகு, அடுத்த 3 அல்லது 4 நாள்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகும். எனவே வட கிழக்கு பருவமழை தொடங்குவது மேலும் சில நாள்கள் தாமதமாகும்.
தற்போது தென் மேற்கு வங்கக் கடலில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.
பெரியகுளத்தில் 160 மி.மீ.: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 160 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் 100 மி.மீ., சென்னை விமான நிலையம், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர், கோவை மாவட்டம் மேட்டுபாளையம், கடலூர் மாவட்டம் சிதம்பரம், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.