விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் ஆன்லைன் பத்திரிகைகள் தடை செய்யப்படும் என தமிழக செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் 2016-இல் ஆட்சி மாற்றம் வேண்டும் என திமுகவினர் தேர்தலைச் சந்தித்தனர். ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் முடிவு செய்து அவர்களது கோரிக்கையை நிராகரித்தனர். திமுகவைப்போல மைனாரிட்டி ஆட்சி நடைபெறவில்லை.
இந்த அரசு முறையான பத்திரிகைகளுக்கு அங்கீகாரம் அளித்து வருகிறது. வரைமுறைப்படுத்தப்படாத பத்திரிகைகளுக்கு அரசு ஊக்கம் தராது. அவர்களைக் கட்டுப்படுத்தவும், விதிகளுக்குப் புறப்பாகச் செயல்படும் ஆன்லைன் பத்திரிகைகளை முழுமையாகத் தடை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.