வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் பலத்த மழையும், பரவலாக மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரியகுளத்தில் 16 செ.மீ. மழையும், பெரியநாயக்கன்பாளையத்தில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
இதனிடையே தொடர் மழை காரணமாக மின்னல் தாக்கி பெண் உள்பட 2 பேரும், மின்சாரம் பாய்ந்து சிறுமி ஒருவரும் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்றும், அக்டோபர் 26-ம் தேதிக்கு மேல் வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.